கலைஞர் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டிருந்த நேரம். சிறந்த தயாரிப்பாளரான ஏ.வி.எம். செட்டியார் கலைஞரின் வசனங்களைத்தான் இந்த படத்தின் துருப்பு சீட்டாக நினைத்திருப்பார். அவரே எதிர்பார்க்காத திருப்பம் சிவாஜி. சூப்பர்ஸ்டார் கலைஞரை விட இந்த படத்தில் தெரிபவர் சிவாஜிதான். இத்தனைக்கும் அவருக்கு கடுமையான போட்டி – எஸ்.எஸ்.ஆர், ஸஹஸ்ரனாமம் ஆகியவர்கள் நடிப்பில் இளைத்தவர்கள் இல்லை. சிவாஜி காட்டிய வேகம், உணர்ச்சிக் கொந்தளிப்பு, குரல் மாடுலேஷன், சிம்மக் குரல், நடனம் (ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே பாட்டை பாருங்கள்) முதல் படத்திலேயே சென்சுரி!
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது என்று வசனம் பேசி பார்க்காத தமிழ் நடிகர் இல்லை. ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் என்றும் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்றும் பேசுவதை மறக்க முடியாது. அனல் பறக்கும் வசனங்கள், அந்த வசனங்களையும் விஞ்சிய நடிப்பு.
செட்டியாரின் தயக்கத்தை மீறி சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்திய பெருமாளுக்கு தமிழ் சினிமா உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
நினைவில் நிற்கும் சில வசனங்கள்.
கல்யாணி: இட்லிக் கடையா?
பக்கத்து வீட்டு அக்கா: தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு அதுதானே தாசில் உத்யோகம்!
குணசேகரன்: மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கான்
போலீஸ்காரன்: ஏய்
குணசேகரன்: உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்
போலீஸ்காரன்: சரிதான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்.
பார்க்கில் தூங்கும் குணசேகரனை எழுப்பும் ஆள்: என்னடா? முழிக்கிறே?
குணசேகரன்: பின்ன, தூங்கினவன எழுப்பினா, முழிக்காம என்ன செய்வான்?
பாரதிதாசனின் வசனம் என்று நினைக்கிறேன் – ஓடப்பர் இருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ!
1952-இல் வந்த படம். ஏ.வி.எம். தயாரிப்பு. பெருமாள் ஒரு பாகஸ்தர். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., பண்டரிபாய் ஆகியோருக்கு முதல் படம். எஸ்.வி. ஸஹஸ்ரனாமம் ஒரு முக்கிய ரோலில். இதில் அவருக்கு தங்கையாக வருபவர்பேர் மறந்துவிட்டது.ஸ்ரீரஞ்சனி (நன்றி கிருஷ்ணமூர்த்தி!) பின்னாளில் இல்லற ஜோதி படத்தில் சிவாஜிக்கு ஜோடியாகவும் நடித்தார். பிறகு ரத்தக் கண்ணீரில் எம்.ஆர். ராதாவுக்கு ஜோடியாகவும், அறுபதுகளில் நான் படத்தில் முத்துராமனின் வளர்ப்புத் தாயாகவும், மனோகரின் நிஜத் தாயாகவும் நடித்தாராம். (நன்றி, நல்லதந்தி!) வி.கே. ராமசாமி உண்டோ? இசை சுதர்சனம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு. அவர்கள் ஏ.வி.எம்முக்குள் நுழைந்தது இந்த படம் மூலமாகத்தான் போலிருக்கிறது. செட்டியார் சொல்வதை இங்கே பாருங்கள்.
கதை தெரிந்ததுதான். ரங்கூனில் மூன்று அண்ணன்கள். கல்யாணி தமிழ் நாட்டில். கல்யாணியின் கல்யாணத்தை பார்க்க ஒரு அண்ணன்தான் வர முடியும் நிலை. சென்னையில் வந்து இறங்கும் சிவாஜி பணத்தை ஒரு நாட்டியக்காரியிடம் இழக்கிறார். கல்யாணியோ கணவனை இழந்து இட்லிக் கடை வைத்து பிழைக்கிறாள். கல்யாணியை கண்டுபிடிக்கும்போது அவள் உன் மாமன் உன்னை சீராட்ட பெரும் பணத்தோடு வருவான் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். பணம் எல்லாம் போய் ஏழை ஆகிவிட்டேன் என்று சொல்ல விரும்பாத சிவாஜி தான்தான் அண்ணன் என்று சொல்லாமல் கிறுக்காக நடித்து அதே நேரத்தில் கல்யாணிக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறார். கல்யாணியை ஒரு பூசாரி படுக்கைக்கு கூப்பிட, கல்யாணி வெறுத்து போய் தன் குழந்தையை காப்பாற்ற முடியாததால் அதை அற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயல, போலீசில் பிடிபடுகிறார். பூசாரியை தாக்கும் சிவாஜியும் போலீசில் பிடிபடுகிறார். பிறகு புகழ் பெற்ற நீதி மன்ற வசனங்கள். நடுவில் அவருக்கு பண்டரிபாயிடம் இட்லி திருட்டு, மற்றும் காதல். பண்டரிபாய்க்கு தன்னிடமிருந்து இட்லி திருடிக் கொண்டு போன அழுக்கான வாலிபன்தான் காதலிக்க கிடைத்தானா என்றெல்லாம் கேட்கக் கூடாது. ரங்கூனிலிருந்து தப்பி வரும் சின்ன அண்ணன் எஸ்.எஸ்.ஆர். காலை இழந்து பிச்சைக்காரனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்து அவர்கள் நல்வாழ்வுக்கு போராடுகிறார். பெரிய அண்ணன் சஹஸ்ரனாமம்தான் கேசை விசாரிக்கும் ஜட்ஜ். பிறகு ஆற்றில் வீசப்பட்ட குழந்தை காப்பாற்றப்பட்டு, எல்லாரும் ஒன்று சேர்ந்து சுபம்!
சிவாஜி ஒரு புயல்தான். அந்த மாதிரி வேகம் உள்ள நடிகரை தமிழ் சினிமா உலகம் அது வரை பார்த்ததில்லை. இதற்கு முன் எனக்கு தெரிந்து ஓரளவாவது வேகம் உள்ள பாத்திரங்கள் அபூர்வம்தான் – சந்திரலேகா ரஞ்சன், வேலைக்காரி கே.ஆர். ராமசாமி, மந்திரி குமாரி எஸ்.ஏ. நடராஜன் மாதிரி. ஹீரோக்கள் எல்லாம் வேறு மாதிரி – ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் இரண்டு நிமிஷம் gap விடும் பாகவதர், மென்மையாக பேசும் டி.ஆர். மகாலிங்கம், எம்.கே. ராதா, எம்ஜிஆர் மாதிரி கத்தி சண்டை வீரர்கள், இவர்கள் நடுவில் ஸ்டைலாக கலைந்த தலையோடும், கவர்ச்சியான புன்னகையோடும், சிம்மக் குரலோடும் அவர் நுழைந்து நேராக டாப்புக்கு போய்விட்டார். அத்துடன் திராவிட இயக்கப் படங்களுக்கு, உணர்ச்சிகரமான வசனம் பேசுவதற்கு, intense நடிப்புக்கு அவர்தான் சரி என்றாகிவிட்டது. டி.ஆர். மகாலிங்கம், கே.ஆர். ராமசாமியின் குறுகிய திரை உலக வாழ்க்கை சடாலென்று இறங்கி விட்டது. என், நன்றாக நடித்த எஸ்.எஸ்.ஆர். சஹஸ்ரனாமம் ஆகியோரையே இந்த படத்தில் நமக்கு ஞாபகம் இருப்பதில்லை.
பண்டரிபாய் சின்ன பெண்ணாய், சொப்பு மாதிரி இருப்பார்.
இன்று இந்த படம் முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு அதே தாக்கம் ஏற்படுமா எனபது எனக்கு சந்தேகம்தான். ஐம்பதுகளில் அது யதார்த்தமான படம் என்றே கருதப்பட்டிருக்கும். இப்போது நாடகத்தன்மை உள்ளது, melodrama என்று சொல்லலாம். melodrama-வின் ஒரு உச்சம் என்று நான் இந்த படத்தை கருதுகிறேன்.
மிகவும் charming, quaint பாட்டுக்கள். சுதர்சனம் கலக்கிவிட்டார்.
அந்த “போறவரே” என்ற வார்த்தையில் இருக்கும் கொஞ்சல் அபாரம். எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரல் பாப்பா மாதிரி இருக்கும் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்துகிறது.
ஓ ரசிக்கும் சீமானே வா ஒரு பிரமாதமான பாட்டு. பாடியது, யார்? எழுதியது கலைஞர்தானாம். விவரம் !
சி.எஸ். ஜெயராமன் பாடும் “தேசம் ஞானம் கல்வி” எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்று. உடுமலை நாராயண கவி அருமையாக எழுதி இருப்பார்.
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே
காரியத்தில் கண் வையடா தாண்டவக் கோனே
கட்டி அழும்போதும் தாண்டவக் கோனே – பணப்
பெட்டியிலே கண் வையடா தாண்டவக் கோனே
நல்ல வரிகள்!
அப்புறம் “கா கா கா” – அதற்கு காக்காய் கத்துவதை போலவே பின்னணியில் வயலின் சூப்பர். கலைஞர் எழுதிய பாட்டோ? சி.எஸ். ஜெயராமன் பாடியது.
“நெஞ்சு பொறுக்குதில்லையே” பாரதியார் பாட்டு. சி.எஸ். ஜெயராமன். சுமார்தான்.
No comments:
Post a Comment