தமிழ் திரைப்பட வரலாறு பற்றி எத்தனையோ அறிஞர்கள் ரசிகர்களுக்கு எடுத்துறைத்திருக்கிறார்கள். எனது பாணியில் நானும் கொஞ்சம் சொல்லலாம் என முடிவெடுத்துவிட்டேன்.

தமிழில் முதன் முதலில் வந்த திரைப்படம் “கீச்சக வதம்”. அதென்ன பெயர் கீச்சக வதம்? இதிகாசம் படித்தவர்களுக்கு இதற்கு பதில் தெரியாமலிருக்காது. 12 வருட வனவாசத்துக்கு பிறகு பாண்டவர்களும், பாஞ்சாலியும் விராடனுடைய அரண்மனையில் மாறுவேடத்தில் தஞ்சம் புகுந்தார்கள். ஒவ்வொர்வரும் ஒவ்வொரு பணியில் அமர்ந்து கொண்டார்கள். பீமன் குக் ஆகிவிட்டான். தனது பெயரை வலலன் என் மாற்றிக் கொண்டான். பாஞ்சாலியும் சாய்ராந்திரி எனப் பெயரை மாற்றிக் கொண்டு மகாராணி சுதேஷ்னாவிற்கு வேலைக்காரியாக இருந்தாள். சுதேஷ்னாவிற்கு கீச்சகன் என ஒரு சகோதரன் இருந்தான். அவன் மகாராணி சுதேஷ்னாவின் தயவால் சாய்ராந்திரியை தன் அறைக்கு வரவழைத்தான் அவளை பிடிக்க முயன்றான். இதை கேள்விப்பட்ட வலலன் வெகுண்டான். தந்திரமாக கீச்சகனை நடன மாளிகைக்கு அழைத்தான். அங்கே ஒரு துணியை சுற்றிக் கொண்டு சாய்ராந்திரி போன்று நின்றுகொண்டு கீச்சகன் கிட்டே நெருங்கியவுடன் “கும் கும், சதக் சதக்…” இது வதம் தான் கீச்சக வதம். கதை கேரளாவில் இன்றும் கதக்களி நடன நாடகமாக மக்களுக்கு அளிக்கப்படுகிறது. தமிழில் மறக்கப்பட்டுவிட்டது.

1918ல் வந்த திரைப்படம். நாடக நடிகர் ராஜு முதலியார் கீச்சகனாகவும், நாடக நடிகை ஜீவரத்னம் பாஞ்சாலியாகவும் நடித்தார்கள்.

இதை தயாரித்தவர் வேலூர் வாசியான ரங்கசாமி நடராஜ முதலியார். இவர் சென்னைக்கு வந்து தனது மாமா மகன் தர்மலிஙக முதலியாருடன் சேர்ந்து சைக்கிள் வியாபாரம் செய்துகொண்டிருந்தார். கடையின் பெயர் ”வாட்சன் & கம்பெனி”. ஒரு சைக்கிள் ரூபாய் 25 தான்.
”ரப்பர் வண்டி” (சைக்கிள்) பிஸினஸ் காசு பார்க்க ஆரம்பித்தது. சைக்கிள் காராகியது. கார் அமேரிக்க கார் ஆகியது. ரோமர், டேன் & சன்ஸ் கம்பெனியை வாங்கி ருபாய் 1000த்திற்கு காரை விற்றார்கள். இந்த காலகட்டத்தில் ஊமை படங்கள் பார்த்துக்கொண்டிருந்தார் நடராஜ முதலியார். பேசும் படம் எடுக்க ஆசைப்பட்டார். கர்சன் துரை நிகழ்ச்சிகளை நியூஸ் ரீல் ஆக்கி கொண்டிருந்த ஸ்டுவர்ட் ஸ்மித் என்பவரை நண்பராக்கி அவருடன் பூனாவிற்க்கு சென்று ஒரளவு கற்றுக் கொண்டு சென்னைக்குத் திரும்பி ”இந்தியா ஃபில்ம் கம்பெனி” என்று திரைப்பட தொழில் துவங்கினார். மூப்பனாரிடம் ரூபாய் 2000த்திற்க்கு ஒரு 35 மில்லிமீட்டர் ஊமைப்பட வில்லியம்ஸன் காமிரா வாங்கினார். அதில் பிறந்தது தான் “கீச்சக வதம்”