நினைவிலிருந்து இன்னொரு படத்துக்கு லேட்டான விமர்சனம்.
தமிழில் சினிமாவின் சாத்தியங்களை வெளிபடுத்திய முதல் படம் இதுதான். இன்றும் சுவாரசியம் குறையவில்லை. இதைத்தான் தமிழின் முதல் சினிமா என்று சொல்லவேண்டும். உண்மையிலேயே பிரம்மாண்டமான படம். 1948இல் பார்த்தவர்கள் அசந்து போயிருப்பார்கள். (அன்று விகடனிலோ கல்கியிலோ அல்லது வேறு பத்திரிகைகளிலோ எழுதப்பட்ட விமர்சனத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா?) அன்று வரையில் வந்த உலக சினிமாக்களின் வரிசையில் வைத்து பார்க்கக்கூடிய படம்.
யுனெஸ்கோ இந்திய சினிமாவின் மைல் கல்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. (மற்ற இந்தியப் படங்கள் அடுத்த போஸ்டில்). அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்க்ரசில் இருக்கும் இரண்டு தமிழ் படங்களில் இதுவும் ஒன்று (மற்றது அவ்வையார். இந்த லிஸ்டில் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது இந்தியாவுக்கு வெளியே தமிழ் சினிமா இல்லவே இல்லை என்று தெரிகிறது.) நியூ யார்க் டைம்ஸின் விமர்சனம் இங்கே.
இந்த படம் வந்த போது தமிழில் பதினேழு பதினெட்டு வருஷங்களாக படங்கள் தயாரிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹரிதாஸ், கண்ணகி, சேவா சதனம், தியாக பூமி, சிவகவி, மீரா, நந்தனார், திருநீலகண்டர், எஸ்.எஸ். வாசனே எடுத்த மங்கம்மா சபதம் உட்பட்ட பல படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றுள் அநேகமானவை பாட்டுக் களஞ்சியங்களே. அதுவும் தியாகராஜா பாகவதரின் படங்களில் பாட்டுகளுக்கு நடுவே சில சமயம் வசனம் பேசுவார்கள். அபூர்வமாக சபாபதி, சேவா சதனம் போல பாட்டுக்களை மட்டுமே நம்பி இருக்காத படங்கள் வந்தாலும் அவை நாடகங்களை வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன . சந்திரலேகாவுக்கு பிறகும் பல படங்கள் அப்படி வீடியோ எடுத்தது போலத்தான் இருந்தன என்பது வேறு விஷயம்.
சொல்லப் போனால் இதற்கு முன் வந்த படங்களில் 1941இல் டி.ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி நடித்து வெளி வந்த சபாபதி, 1945இல் எம். எஸ். சுப்புலக்ஷ்மி நடித்து வெளி வந்த மீரா ஆகியவற்றைத்தான் இன்றும் பார்க்கமுடியும். ஆனால் இந்த இரண்டைத் தவிர 1948க்கு முன் வெளி வந்து நான் பார்த்த படங்கள் குறைவுதான். 1942இல் தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா நடித்து வெளி வந்த நந்தனார், 1943இல் ரஞ்சன், வைஜயந்திமாலாவின் தாய் வசுந்தரா தேவி நடித்து வெளி வந்த மங்கம்மா சபதம், எந்த வருஷம் வந்தது என்று சரியாக தெரியாத எம். எஸ். நடித்த சகுந்தலை அவ்வளவுதான். பக்கத்து வீட்டுக்கு டிவி வந்த புதிதில் பார்த்த சிவகவி ரொம்ப மங்கலாக நினைவு இருக்கிறது. (எனது கருத்து படித்தும் கேட்டும் உண்டானது, படங்களைப் பார்த்து அல்ல.)
சபாபதி இன்றும் சிரிப்பு மூட்டக்கூடிய படம். மீராவின் பஜன்களை இன்றும் எம்.எஸ்ஸின் குரலில் கேட்கலாம். ஒரு வேளை இளங்கோவனின் வசங்களுக்காக புகழ் பெற்ற கண்ணகியும் இந்த லிஸ்டில் இருக்கலாம், ஆனால் நான் பார்த்ததில்லை, இன்று பார்க்கக்கூடிய பிரிண்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. சதி லீலாவதி, தியாக பூமி, சேவா சதனம், திருநீலகண்டர், ஹரிதாஸ், கே.பி. சுந்தராம்பாள் நடித்த நந்தனார் இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் பார்க்கக்கூடிய பிரிண்ட்கள் இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
1948இல் வெளி வந்த படம். ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, ரஞ்சன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், சுந்தரிபாய், எம்ஜிஆரின் மனைவி வி.என். ஜானகி, ஜாவர் சீதாராமன் இவர்களை அடையாளம் தெரிகிறது. எஸ். எஸ். வாசன் இயக்கம். எஸ். ராஜேஸ்வர ராவ் இசை.
படத்தை எடுக்க 5 வருஷம் பிடித்ததாம். 30 லட்சம் ரூபாய் செலவாம். ஒரு கோடி ரூபாய் வசூலாம். 48இல் கோடீஸ்வரன்!
இந்த படத்திற்கு கதை எழுத வாசன் எல்லாரையும் சக்கையாக பிழிந்தாராம். இதை பற்றி ராண்டார்கை எழுதிய சுவையான குறிப்பு இங்கே.
கதை என்னவோ இந்த படத்தில் முக்கியம் இல்லை. (முக்கால்வாசி தமிழ் படங்களைப் போலத்தான்.) வாரிசுப் போட்டியில் வில்லனான தம்பி ரஞ்சன் நாட்டை கைப்பற்றுகிறார். அண்ணனான எம்.கே. ராதா காதலிக்கும் டி.ஆர். ராஜகுமாரியையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சரியான சமயம் பார்த்து ரஞ்சனை ராதா தோற்கடித்து நாட்டையும் காதலியையும் கை பிடிக்கிறார். இதுதான் கதை. இதில் முரசு டான்ஸ், சர்க்கஸ், யானைகள், அனல் பறக்கும் கத்தி சண்டைகள், வேகமாக ஓடும் குதிரைகள், தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி போன்ற மக்களை கவரும் பல விஷயங்கள்.
தாவணி இல்லாத டி.ஆர். ராஜகுமாரி வரும் காட்சி ஆபாசம் என்று பலத்த கண்டனம் செய்யப்பட்டதாம். கண்டித்தவர்கள் எல்லாரும் ஜொள்ளு விட்டுக்கொண்டே கண்டித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். என் அம்மா சில சமயம் இந்த காலத்து சினிமாக்களை பார்த்து விட்டு “அந்த காலத்திலே சந்திரலேகாவிலே தாவணி இல்லாததற்கே…” என்று என்று துவங்கும் ஆபத்து எங்கள் குடும்பத்தில் இப்போதும் உண்டு. இதில் சர்க்கஸ் பெண்களுக்கும் ஜிப்சி பெண்களுக்கும் கூடத்தான் தாவணி இல்லை, ஆனால் அது ஏன் பேசப்படவில்லை?
எல்லாரும் சிலாகிக்கும் அந்த முரசு டான்ஸ் அபாரமானது. எத்தனை முரசுகள்? அருமையான காட்சி அமைப்பு. கொடுத்த காசு இந்த ஒரு காட்சிக்கே சரியாகிவிட்டது. விவரித்து மாளாது, மேலே உள்ள வீடியோவை பாருங்கள். அதற்கு ஈடான காட்சிகளை கொண்டு வரக்கூடியவர் இன்றைய இயக்குனர் ஜி. ஷங்கர் ஒருவர்தான். (டி.ஆர். ராஜேந்தருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால்…)
கிராமத்தில் நெருப்பு பிடிக்கும் காட்சி, எம்.கே. ராதாவின் கூடாரங்களை ரஞ்சன் தாக்கும் காட்சி, யானைகளை வைத்து எம்.கே. ராதா இருக்கும் குகையை மூடி இருக்கும் பாறையை நகர்த்தும் காட்சி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அருமையாக, நாடகம் போல இல்லாமல் படமாக்கப்பட்டிருந்தன. ஒரு சினிமா போல பல ஆங்கிள்களில் எடுக்கப்பட்டது அந்தக் காலத்தில் பெரிய விஷயம். சர்க்கஸ் கூட்டம் ஊரைவிட்டு ஊர் போகும் காட்சி, சர்க்கஸ் சாகசங்கள் எல்லாமே நன்றாக படமாக்கப் பட்டிருந்தன. அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாக இருந்திருக்கும்.
எல்லாரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரஞ்சனின் நடிப்பில் ஒரு உத்வேகம் இருக்கிறது. ஆனால் டி.ஆர். ராஜகுமாரி ஸ்லோ மோஷனில்தான் பேசுவார்.
என்.எஸ்.கேயின் காமெடி இன்று (எந்த படத்திலும்) பார்க்க முடிவதில்லை. இதில் அவர் கரடி வேஷம் போட்டுக்கொண்டு வரும்போது ஆளை விடுங்கப்பா என்றுதான் தோன்றுகிறது. கோட்டைக்குள் நுழைய அவர் எல்லா வார்த்தைகளையும் ரிவர்சில் பேசுவது கொஞ்சம் சிரிக்கலாம்.
No comments:
Post a Comment